குரு பெயர்ச்சி
முருகன், சிவன், திருமால் என்பதெல்லாம்
பேரொளியின் பல பல நிறமோ? வகையோ?
பண்டைய கேள்வி, பலரும் பலமுறை
கேட்ட கேள்வி
நானும் ஒரு முறை கேட்டுப்பார்த்தேன்
குருவை அடையும் அவாவை அடைந்தேன்
அறியா குருவை நினைந்து அழுதேன்
திருமால் நாமம் தினமும் இசைத்தேன்
திருமால் சிவனை நெஞ்சில் நிறைத்தான்
சிவனோ குமரனே தன் குரு என்றான்
முருகா முருகா என்று மொழிந்தேன்
குருவாய் வருவாய் என்று நெகிழ்ந்தேன்
குருவாய் முருகன் வரவும் மகிழ்ந்தேன்
குருவை அறிதல் கடினம் கடினம்
குருவின் தேடல் அருளால் நிகழும்
பயணம் பலரும் உதவிட நிகழும்
குருவே குருவே குருவே சரணம்.
முருகா அழகா முதலின் முதலே
வள்ளி மணாளா, சிவனின் சிவனே
எனை நீ ஆட்கொண்ட விதம் அறிவேன்
ஆட்கொண்ட நீ அகலாதிருப்பாய்,
உன்பதம் மறவாதிருக்க நீ எனக்கருள்வாய்
உணர்வு உயர்ந்து உயிரை உணர நீ எனக்கு அருள்வாய்
அண்ணாமலை முனி போல் பாடவல்லேன்
அவ்வை போல் உன்னை அழைக்க வல்லேன்
சிறுவன் எனதாசை எல்லாம் சிறிதே உரைப்பேன்
சிவம் செய்த இவ்உயிர் செப்பனே வாழ
வேண்டிய யாவும் இனிதே அருள்வாய்,
நானும் நீயும் வெவ்வேறு இலையே?
எங்கும் நிறைந்த பேரொளி நீயே
என்னில் உன்னை உணர்வது எவ்வனம்??
என்னுள் உன்னை உணர்ந்திட அருள்வாய்
குருவே சரணம், குருவே சரணம்.
Comments
Post a Comment