ஆதி அந்தம் இல்லா அருட்கடல் அண்ணாமலை எனும் அக்னிப் பெருங்கடல் தேவார மூர்த்தி நீ, திருவாசகத் தேன் நீ அம்பலவாணன் நீ, அருட்பெரும் ஜோதி நீ அழைக்கிறேன் உன்னை அருள் செய்ய வேண்டும் துதிக்கிறேன் உன்னை துணை செய்ய வேண்டும் ஆடிக் களித்தோம், வெறுமையில் கூடிக் களித்தோம் அழகின்பின் ஓடிக் களைத்தோம், வீணே உறங்கிக் களைத்தோம் ஓயாமல் பேசிக் களைத்தோம், வாழ்கை தொலைத்தோம் சிவன் என்னை காண வேண்டும், சீக்கிரம் காக்க வேண்டும் வேள்வி பூஜை எல்லாம் வெறும் வெட்டி வேலை ஆச்சு ஊராற்கு காட்டும் உத்தம வேடம் ஆச்சு சில்லறை செலவிட்டு சிவன் வாங்கும் வேலை ஆச்சு சிவனை அறியவில்லை போதை இன்னும் தெளியவில்லை மனது என்பது புரியவில்லை, மருந்தேதும் தெரியவில்லை பெண்ணாசை புரியவில்லை, புதிதாய் ஏதும் நடக்கவில்லை சாக்கடையில் உழன்றேன், சந்தனம் போல் அணிந்தேன் சிவன் என்னை அடையவேண்டும், சிந்தனை தெளியவேண்டும் ஊசி முனை அளவு போதும் உன்னருள் உள்ளம் தெளிய இவ்வளவு போதும் திருவருள் உடல் என்னும் தடை உடைய தேவை சிவன் அருள். என்னை இழக்க வேண்டும், உன்னில் கலக்க வேண்டும். உடல் செய்யும் பயணம் இனி இப்படித் தொடர வேண்டும். அன்பே சிவம்...